டெல்லி: செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 6ம் தேதி கடைசி நாளாகும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்புத் துறை தற்போது அறிவித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.
செல்போன் இணைப்பை அளிப்பதை தவிர துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். எதையும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.
சேவையை தொடர்ந்து பெற உங்களின் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள் என்று கூறி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.