Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
19/7/2012, 3:06 am
கழுதை - உருவகக் கதை


முனுசாமி, என்று ஒரு சலவைத் தொழிலாளி வாழ்ந்து வந்தார்…

தினமும் ஊருக்கருகில் இருக்கும் குலத்திற்கு சென்று துணிகளை துவைத்து வருவது அவரது வாடிக்கையான செயல். ஆரம்ப காலத்தில் அவர் கழுதையில் சென்றுதான் துணிகளைத் துவைத்து வந்தார், தனது தொழில் சிறப்பு காரணமாக அதிக லாபம் சம்பாதித்து நாளடைவில் ஒரு இரண்டு சக்கர வாகனம் வாங்கினார், அதன் பிறகு அவர் கழுதையில் செல்வதைத் தவிர்த்து விட்டார். ஆனாலும், தனது வளர்ச்சிக்கு அந்தக் கழுதை தான் காரணம் என்பதால் அதை தனது வீட்டிலேயே கட்டி வைத்து வளர்த்து வந்தார். அந்த ஊரில் திருட்டுப் பயம் அதிகம் இருந்ததால், தன்னிடம் சலவைக்காக வந்துள்ள விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை யாராவது திருட வரலாம் என்பதற்காக, அதை அறிந்து கொள்வதற்காக அவர் வீட்டில் ஒரு நாயையும் வளர்த்து வந்தார்.

அவர் நினைத்தது போலவே ஒரு நாள் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து விட்டனர்…. முனுசாமியோ அசந்து தூங்கிக் கொண்டு இருந்தார், ஆனால் அவர் வளர்த்து வந்த நன்றியுள்ள நாய் குலைத்து திருடர்களை காட்டிக் கொடுத்து விட்டது. உடனே முனுசாமி விழித்து எழுந்து வந்தார், அவரைப் பார்த்ததும் திருடர்கள் தலை தெறிக்க ஓடி விட்டனர். முனுசாமி தனது நாயைப் பார்த்து பெருமைப் பட்டார், நாய் பாசத்தோடு அவரைப் பார்த்து வாலாட்டியது. பிறகு அதற்காக வாங்கி வைத்திருந்த பிஸ்கெட்களில் கொஞ்சம் அதிகமாகவே எடுத்துவந்து போட்டு, நாயை தடவிக் கொடுத்து விட்டு சென்றார். இதை எல்லாம் அசை போட்டுக் கொண்டே கழுதை பார்த்துக் கொண்டிருந்தது…!

நாட்கள் கடந்தன ….

ஒருநாள், ஒரு திருமண வீட்டுத் துணிகளைத் துவைத்த களைப்போடு அசந்து தூங்கினார் முனுசாமி…. அதே திருடர்கள் மீண்டும் வந்தனர்…. ஆனால் வந்தவர்கள் உடனடியாக நாய்க்கு மயக்க மருந்து தடவிய பிஸ்கெட்டை போட்டு விடுகின்றனர், நாயும் குலைக்காமல் அந்தப் பிஸ்கெட்டை சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு வாலாட்டியது. சிறிது நேரத்தில் நாய் மயங்கியது… அதுவரை மறைந்திருந்து காத்திருந்தவர்கள் தைரியமாக உள்ளே நுழைந்தனர். அப்போது… அவர்கள் சற்றும் எதிர் பார்க்காத நிலையில் அங்கிருந்த “கழுதை” கத்தத் தொடங்கியது…. திருடர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது தடுமாறினார்கள். கழுதையின் சத்தம் கேட்டதும் முனுசாமி எழுந்து வந்து பார்க்கிறார்…. யாரையும் காணவில்லை. நாயைப் பார்கிறார் அது தூங்கிக் கொண்டு இருக்கிறது… பிறகு சென்று தூங்கத் தொடங்கினார்.
அதன் பிறகு அந்தத்திருடர்கள் மீண்டும் உள்ளே நுழைய முயற்சிக்க… மீண்டும் கழுதை கத்தியது… முனுசாமி வருகிறார்…. சுற்றும் முற்றும் பார்க்கிறார்… கழுதையின் மேல் சிறிய கோபத்தோடு, மீண்டும் சென்று தூங்கினார். திருடர்கள் மீண்டும் உள்ளே நுழைய முயற்சிக்க… மீண்டும் கழுதை கத்தியது… முனுசாமி வருகிறார்…. சுற்றும் முற்றும் பார்க்கிறார்… அவருக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பெரிய தடியை எடுத்து, தன் ஆத்திரம் தீரும் வரை அந்தக் கழுதையை அடித்தார்…

” கழுதை! உனக்கு இப்ப என்ன வந்துச்சு… காலையில இருந்து துணி வெளுத்துட்டு, இப்பதான் அசந்து தூங்கப் போனேன், ஏன் இப்படி கத்தி உயிரை வாங்குறே?
உனக்கு சும்மா வச்சி சாப்பாடு போடுறது தப்புதானே?… நாளைக்கே உன்னை யார்கிட்டயாவது வித்துடுறேன்….” என்று பலவாறு திட்டிக் கொண்டே சென்று தூங்கினார்…. அதன் பிறகு கழுதையால் கத்த முடிய வில்லை.

காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த துணிகள், மற்றும் பொருட்கள் எதையும் காணவில்லை! அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தார் முனுசாமி…
வாசலில் கட்டப் பட்டிருந்த கழுதை கண்ணீரோடு நின்று கொண்டிருந்தது…! நாய் இன்னும் எழுந்திரிக்க வில்லை. அருகில் சென்று பார்த்தார், அப்போது தான் நாய் மயங்கிக் கிடக்கிறது என்று அவருக்குப் புரிந்தது. இரவு கழுதை கத்தியதன் அர்த்தம் அவருக்குப் இப்போது புரிந்தது. நாய் குலைத்தால் தான் திருடர்கள் வருவார்கள் என்ற தனது தவறான எண்ணத்தை உணர்ந்த அவர் கழுதையை பாசத்தோடு தடவிக் கொடுக்கத் தொடங்கினார்…!

@ எழுத்ததிகாரன்

Admin•••2
avatar
எழுத்ததிகாரன்
19/7/2012, 4:31 am
காதல் - உருவகக் கதை

"இன்றைய உலகில், இந்தக் காதல் விவகாரம் எப்படிப்பட்டது என்பதை இன்னும் நீ புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே என்பதை எண்ணித் தான் நான் சிரித்தேன்!" என்று மலரைப் பார்த்து வண்டு சொன்னது!.

பூத்துக் குலுங்கும் மலர்களின் மனம், அந்தத் தோட்டத்தில் எங்கும் பரவிக் கொண்டிருந்த நேரம். அன்றலர்ந்த மலர்களின் பொலிவும் அதை நாடி வரும் வண்டுகளின் மொழியும் மலர்க் கூட்டத்திற்கே மகிழ்ச்சி தரும் நன்னாட்களைப் போல் காட்சியளித்தன…. உதிந்து விட்ட மலர்களைப் பற்றியோ, இனி உதிரவிருக்கும் மலர்களை பற்றியோ கவலைப்படாத மலர்க்கூட்டங்கள், நாடி வரும் வண்டினங்களின் மோக மொழியைக் கேட்டு மெய் மறந்து கிடந்தன…….!

அப்போதுதான் இதழ் விரித்த ஒரு மலர் "நேற்றுவரை அடிக்கடி வந்து பார்த்து விட்டுச் சென்ற காதல் வண்டார், இன்று ஏன் வரவில்லை?" என்று ஏங்கி, சிந்திக்கத் தொடங்கியது.

புதுமலரின் பொலிவைக் கண்டு புன்னகை புரிந்த வண்ணம் அங்கு வந்த காதல் வண்டு, "நான் வரத் தாமதமாகியதால், என் மேல் வருத்தமா என் புது மலரே!" என்று காதலுடன் அதனருகில் நெருங்கியது…

"எவ்வளவு நேரம் காத்திருப்பது! இப்படியா என்னைச் சோதிக்க வேண்டும்?" என்று வருத்தத்துடன் கூறி விட்டு, வண்டாரின் அணைப்பிற்கு இடம் கொடுத்து இன்பத்தில் மூழ்கியது!

"வரும் வழியில் ஒன்றா? இரண்டா? எவ்வளவோ வேலை! அதோடு, எதிர்ப் பட்டதற்கெல்லாம் ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டுமே… இந்த வகையில் என் வருகை தாமதப் படுவது இயற்கைதான். என்றாலும், நீ புதிது என்பதால், புரிந்து கொள்ள நாளாகும்!" என்று வண்டு கூறிவிட்டு, மீண்டும் அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது.

மறுநாள்...

காலை மலர்ந்தது!

உயிரினங்கள் விழித்தெழுந்தன...

நேற்றிருந்த பொலிவு இன்று தனக்கில்லாததை அறிந்த அந்த மலர், "காதலர் வருவாரா? அல்லது வராது கை விட்டு விடுவாரா?" என்ற கவலையில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது, அப்பக்கமாக வந்த அந்த வண்டு, இந்த மலரின் நிலையைப் பார்த்ததும், பார்க்காதது போல் வேறு மலரை நாடிச் சென்றது!

இந்தத் துரோகத்தைக் சகித்துக் கொள்ள முடியாத அந்த மலர், மேலும் சோபை இழந்து, தலையை சாய்த்தவாறு காட்சியளித்துக் கொண்டிருந்தது!

"நாளை வீழ்ந்து விடவிருக்கும், அந்த மலரைக் கடைசியாக ஒருமுறை சந்தித்து, ஏதாவது ஆறுதல் சொல்ல வேண்டும்" என்று எண்ணிய காதல் வண்டு, மீண்டும் அந்த மலரிடம் நெருங்கியது.சோகமே உருவாக நின்ற அந்த மலர், "இது தான் நீ என் மேல் கொண்ட காதலா?" என்று கேட்டது.

இந்த வார்த்தையைக் கேட்ட வண்டு, அதற்காக வருந்தாமல், சிரிக்க ஆரம்பித்தது!

"எதற்காகச் சிரிக்கிறாய்? எனது நிலையைக் கண்டா? அல்லது உன் நிலையைக் கண்டா?" என்று மலர் ஆத்திரமாகக் கேட்டது.

"யார் நிலையைக் கண்டும் நான் சிரிக்க வில்லை! இன்றைய உலகில், இந்தக் காதல் விவகாரம் எப்படிப் பட்டதென்று நீ இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே என்பதை எண்ணித்தான் நான் சிரித்தேன்!" என்று கூறிவிட்டு மலரைப் பார்த்தது.

இந்த வார்த்தையை கேட்ட மலர், மேலும் தன் பொலிவை இழந்துவிட்டது போல் காட்சியளித்தது!

வண்டு, மேலும் அங்கு நிற்பதற்கு விரும்பாததால், "வரட்டுமா என் அப்பாவி மலரே!" என்று கூறிவிட்டு வேறு மலரை நாடிச் சென்றது!

(ஐம்பது வருடங்களுக்கு முன்பும், சில காதல் இப்படித்தான் இருந்திருக்கிறது! மனித வாழ்க்கை எப்போதும் ஒரே மாதரியே இருக்கும் என்பதற்கு, இது போல் எத்தனையோ ஆதாரங்கள்….. எத்தனையோ காலச் சுவடுகள்…..)

- எழுத்ததிகாரன்.

(சிங்கை முகிலன். உருவகக் கதைகள்)

Admin•••3
avatar
எழுத்ததிகாரன்
19/7/2012, 5:20 am
தகுதி - உருவகக் கதை

அந்தக் காடு, மனிதர்களின் நடமாட்டம் இன்றி அமைதி பெற்றிருந்தது.

பல வகையான பறவைகள் அங்குமிங்கும் பறந்து கொண்டும், அதற்குரிய ஓசைகளை எழுப்பிக் கொண்டும் இருந்தன. அந்தக் காட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த கோட்டான், எதையோ நினைத்து வேகமாகக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தது!

அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆந்தை, இந்தக் கோட்டானின் குரலைக் கேட்டு அதற்கு எதிரில் வந்து அமர்ந்தது; அதையே பார்த்துக் கொண்டிருந்தது.

“நம் குரலின் இனிமையைக் கேட்டுத்தான் இந்த ஆந்தை இங்கு வந்திருக்கிறது” என்று நினைத்த கோட்டான், மேலும் மேலும் வேகமாக காத்த ஆரம்பித்தது!

இந்த அலறலைக் கேட்ட ஆந்தை “இது என்ன வெறும் அலறல்?” என்று கேட்டது.
“என்ன அலறலா?” என் குரல் உனக்கு அப்படியாத் தோன்றுகிறது?” என்று கேட்டுவிட்டு வெறுப்புடன் ஆந்தையைப் பார்த்தது கோட்டான்.!

“அலறல் என்பது எனக்குத்தான் உரியதென்று இருந்தேன்! ஆனால், இப்போது நீயும் அலற ஆரம்பித்து விட்டதால்: அதை நான் வேறு விதமாகச் சொல்ல முடியவில்லை” என்று ஆந்தை பதிலளித்தது.

“நான் ஒன்றும் உன் குரலுக்கு முயற்சிக்க வில்லை! என் குரலிலேயே ஏற்றமுரத்தான் பயிற்சி செய்கிறேன். அந்த முயற்சியை நீ பாராட்டா விட்டால், உனக்கு “ரசனை”-யே தெரியாதென்றுதான் சொல்லவேண்டும்” – கோட்டான் இப்படிக் கூறிவிட்டு, மேலும் அதை ஆணவத்துடன் பார்த்தது!

“ஆமாம், ஆமாம், எனக்கு “ரசனை” தெரியாதுதான், “ரசனை” தெரிந்த நீ, என் குரலைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டு விட்டு ஆந்தை அலற ஆரம்பித்தது!

ஆந்தையின் அலறலைக் கேட்ட கோட்டான், “பரவா இல்லையே! இந்த அளவுக்கு உன் தகுதி உயர்ந்திருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை!” என்று பாராட்டுக் குரல் எழுப்பியது கோட்டான்!

கோட்டானின் பாராட்டை கேட்டவுடன் ஆந்தைக்கு மகிழ்ச்சி பொருக்க முடியவில்லை! ” நண்பா, இன்று முதல் உனக்கு நானாகவும், எனக்கு நீயாகவும் பாராட்டிக் கொண்டு வாழ்வதுடன், இந்தக் காட்டிலேயே- ஏன், வேறு எந்தக் காட்டிலும் நம் புகழை நிலை நாட்ட வேண்டும்.” என்று சொன்னது ஆந்தை!

ஆந்தையின் நட்பு கிடைத்ததும் அதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! தன்னை விட பெரிய ஆள் இந்த உலகத்திலேயே இல்லை என்று இறுமாப்போடு இருந்தது கோட்டான்!

அந்தச்சமயம் அங்கு வந்த குயில், பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தில் அமர்ந்து, தனது இனிமையான குரலின் இனிமையை அடக்கமாகப் புலப்படுத்திக் கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்தில் இருந்த மற்ற குருவிகள், அந்த இனிமையான குரலைக் கேட்டுப் பல வகையான பாராட்டுக்களை எழுப்பிக் கொண்டிருந்தன!

இந்தக் காட்சியைக் கண்ட ஆந்தையும் கோட்டானும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தன!

“என்ன நண்பா, இந்தக் குயிலின் குரலை உன்னால் ரசிக்க முடிகிறதா?” கோட்டானைப் பார்த்து ஆந்தை இவ்வாறு கேட்டது!

“நம் குரலையே நாம் ரசிக்க நேரமில்லை, இவற்றுக் கெல்லாம் நமகேது நேரம்? அந்தக் குயிலைச் சுற்றிக் கொண்டிருக்கும் மற்றவற்றுக்கு “ரசனை” என்றால் ஏதாவது தெரியுமா? தெரிந்தால் இப்படிக் குயிலின் காட்டுக் கூச்சலைக் கேட்க ஓடுமா?” என்று கோட்டான் ஆரம்பித்தது!

“நமக்கு மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லை! அதுகள் ஒருவழி என்றால், நாமும் அவ்வழியில்தான் செல்ல வேண்டுமா என்ன? நமக்கென ஒரு வழி இருக்கும் போது, நாம் ஏன் அவ்வழியை நாட வேண்டும்?” ஆந்தையின் பதில், கோட்டானுக்குக் குதூகலத்தை அளித்தது!

“ஆம் நண்பா, நம் திறமையை நாம் புரிந்திருக்கும் போது: பிறர் நம்மைப் பற்றிப் புரிந்தாலென்ன, புரியாவிட்டால் என்ன? நீ உன் குரலை எழுப்பு, நான் ரசிக்கிறேன்! நான் என் குரலை எழுப்புகிறேன் நீ ரசி!” என்று கோட்டான் கூறியது, இரண்டும் சேர்ந்து ஏக காலத்தில் அந்தக் காட்டில் குரலெழுப்ப ஆரம்பித்தன!

____________________**_______________**___________________**____________

காலம் ஓடிக் கொண்டிருந்தது!……

குயிலின் புகழுக்கு இணையாக வரவேண்டுமென்று நினைத்த ஆந்தையும் கோட்டானும், என்கேங்குப் பறந்து சென்று கத்த முடியுமோ அங்கெல்லாம் சென்று கத்திப் பார்த்தன... அலறிப் பார்த்தன... இவற்றின் அலறலையும் ஆரவாரத்தையும் கண்ட மற்ற புள்ளினங்கள், எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று கொண்டிருந்தன! எதை ரசிக்க வேண்டுமோ அதை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தன!!

குயிலின் புகழ், ஆந்தையும் கோட்டானும் கத்துவதால் மறைந்து விடப் போவதில்லை! புகழைத் தேடி குயில் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை!

குயிலைப் பற்றி கோட்டான் குறை சொன்னதாம்!

- எழுத்ததிகாரன்

•••4
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

உருவகக் கதைகள் - எழுத்ததிகாரன்

From எழுத்ததிகாரன்

Topic ID: 2

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...