Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
10/11/2016, 2:01 am
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து நாடுமுழுவதும் உள்ள அப்பாவி மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் பெற்றுக்கொண்டது பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசு. விளைவுகளை ஆராயாமல் தெளிவான திட்டமிடப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துச் சொல்லி இந்திய மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கத் தொடங்கியவுடன், இதை விசாரித்த உச்சநீதி மன்றமும் இதை கண்டித்து "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்" என்றும் "முன்னறிவிப்பில்லாமல் நடந்து கொண்டதற்கு பதிலளிக்க வேண்டும்" என்றும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத் தகுந்தது.

அதே நேரத்தில், பிரதமர் மோடி அவர்களின் இந்த அதிரடியான, துணிச்சலான அறிவிப்பு இந்தியாவில் மாற்றத்தை விரும்பிய அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், முன்னறிவிப்பில்லாமலும், கால அவகாசம் வழங்கப்படாமலும் இருந்ததே குழப்பத்திற்கும், அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாகவே இந்திய மக்கள் அனைவரும் மத்திய அரசை விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

டிவிட்டர், முகப்புத்தகம், தமிழ் கருத்துக்களங்கள் போன்ற சமூக வலைத்தளங்களின் உதவியாலேயே மோடி அவர்கள் பிரதமராக ஆட்சிக்கு வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பலமும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அதே சமூக வலைத்தள விமர்சகர்களின் விமர்சனத்திற்கும் இன்று ஆளாகிவிட்டாரே என்பதும் வருத்தமளிக்கிறது.

இதுபோன்ற பல சம்பவங்களால் ஓட்டுப்போடும் மக்களின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்குகிறது என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்களின் முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்ததும் இதற்கு சான்றாகும். பலமான எதிர் கட்சியும், மக்களுக்கான பல நலத்திட்டங்களும் உருவாகியிருப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு வகை செய்திருக்கிறது. ஆனாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் வாக்கு சேகரிப்பதைத்தவிர வேறு எதற்கும் மக்களை பொருட்டாகவே நினைப்பதில்லை என்பதற்கு சமீபத்தில் நடந்த பல சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன.

சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆளாளுக்கு அடுத்த முதல்வர் நான்தான் என்று அதிகாரத்தை கையிலெடுக்க முயலுகிறார்கள். தமிழக அரசியலில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கதாகும். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப்போடுவது மக்களின் கடமை என்றும், உரிமை என்று வாய்கிழிய பேசுகிறார்கள். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப்போடுவது மட்டும்தான் மக்களின் கடமையா? இடையில் ஏற்படும் சிக்கல்களையும், மாற்றங்களையும் முடிவு செய்யும் உரிமை மக்களுக்கு இல்லையா? அல்லது ஐந்தாண்டுகளுக்கு இடையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மக்களிடம் கருத்தைக்கூட கேட்கக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் இது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? என்பது கேள்விக்குறியாகிறது. எல்லா நேரங்களிலும் ஆட்சியாளர்களே முடிவெடுத்துக் கொள்ளவேண்டியதுதானே? ஏன் தேர்தல் நடத்த வேண்டும், ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்? என்று மக்கள் பலர் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அரசியலுக்கும், ஆட்சிக்கும் வரத்துடிக்கும் அனைவரும் "இந்தியாவை வல்லரசாக்குவேன்! மாநிலத்தை முதல் மாநிலமாக்குவேன்! என்று புரட்சிக்குரல் கொடுப்பதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் வல்லரசு என்றால் என்ன? முதல் மாநிலம் என்றால் எப்படி? என்பது இன்றுவரையில் என்னைப்போன்ற பலருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் இதெல்லாம் நடந்தால்தானே தெரிந்துகொள்வதற்கு? எனவே இதெல்லாம் ஏட்டுச்சுரைக்காயாகவே இருக்கிறது! அடுத்து வரும் சந்ததிகள் இதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

எனக்கு நாற்பது வயதாகி விட்டது. இன்னும் 4 தேர்தலை என்னால் சந்திக்க முடியும் என்று நம்பிக்கையும் இருக்கிறது. அதன்பிறகு?.. அல்லது அதற்கு இடையில்?..... கடவுள்தான் முடிவு செய்யவேண்டும்! இந்திய பிரதமரே தனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று பகிரங்கமாக குரல் கொடுக்கிறார் என்றால் நானெல்லாம் எம்மாத்திரம்? முகவரி தெரியாதவரையிலும், அடையாளம் தெரியாதவரையிலும்தான் என்னைப்போன்ற பலருக்கும் உத்திரவாதம்! ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு காலங்களுக்கு வாழ்ந்துவிடப்போகிறோம்? என்ன எடுத்துச்செல்லப் போகிறோம்? என்பதை உணரத்தொடங்கும் வரையில் இதேநிலைதான் நீடிக்கப் போகிறது! இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! இதைத்தான் அனுபவிக்கவேண்டும்! மறுக்கவோ, மாற்றவோ நம்மால் முடியாது.

ஆனால், இந்தியாவில் மாற்றத்தை கொண்டுவரப்போகிறேன் என்றும், கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்றும் பிரதமர் மோடி அவர்கள் துணிச்சலாக முன் வந்திருக்கும்போது அவருடன் ஒத்துழைக்க வேண்டியது இந்திய மக்களான நம் அனைவரின் கடமையாகும். ஆனால், வெறுமனே மோடி அவர்களின் செயல்களை மட்டும் ஆதரிக்காமல், மக்களின் சார்பாகவும் எனது பங்களிப்பாகவும் சில வேண்டுக்கோளை முன் வைக்க இருக்கிறேன். இதெல்லாம் பிரதமர் மோடி அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கு சென்றடையுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனது பங்களிப்பை செய்துவிட்டதாக ஒரு நிம்மதி கிடைக்கும்.

நான் ஒரு திரைப்பட நடிகனாக இருந்தால் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கலாம், அதிகமான சொத்துக்கள் உள்ளவனாக இருந்தால் இதையெல்லாம் ஒரு திரைப்படமாக தயாரித்து வெளியிடலாம், அல்லது அழகிய பெண்ணாகப் பிறந்திருந்தால் எனது புகைப்படத்துடன் சமூக இணைய தளங்களிலும், யூடியூப்பிலும் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் என் மீது திருப்பலாம். ஆனால் இது எதற்குமே நான் தகுதி இல்லாதவனாக இருந்து விட்டேன்.

ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியும். அரசியலில் போட்டியிட முடியும். அதற்குத்தான் எந்தத் தகுதியும் தேவை இல்லையே... ஆனால், படித்தவர்கள் மட்டும்தான் அரசியலில் பங்குபெற முடியும் என்று சட்டம் வரும்வரை என்னால் அதையும் செய்ய முடியாது. ஏனென்றால் முட்டாள்களுடன் வெகுதூரம் பயணிக்க முடியாது அல்லவா. எனவே என்னால் அரசியலில் நீண்ட காலம் பயணிக்க முடியாது. அரசியலில் பங்கு பெற்றால் நான் தவறுகளைத் திருத்தத் தொடங்கி விடுவேன். எல்லோரும் சேர்ந்து என்னைத் துரத்தத் தொடங்கி விடுவார்கள்! பிறகு போராட்டம்தான்! புரட்சிதான்! கடைசியில் அழிவுதான் மிஞ்சும். ஆனால் அதற்கான வயது எனக்கில்லையே... அது போகட்டும்.

பிரதமர் மோடி அவர்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று தற்போது நடைமுறையில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களாக வெளியிட்டிருக்கிறார். ஆனால் இந்த மாற்றம் மட்டும் போதாது.... இன்னும் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற மக்களின் கருத்தாக சில வேண்டுகோளை தொடர்ந்து இங்கும் இன்னும் பல சமூக வலைத்தளங்களிலும் முன்வைக்க இருக்கிறேன்.

பிரதமர் மோடியின் 'அனைவருக்கும் வங்கிக் கணக்கு' என்ற முறை வரவேற்கத்தக்கது. அதேபோல மோடியின் அனைத்து திட்டங்களும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அனைத்து திட்டங்களும் முன் பின் வரப்போகும் பிரச்சினைகளையும், விளைவுகளையும் ஆராயாமல் குதிரைக்கு கடிவாளம் கட்டியதைப்போல ஒரே பக்கமாக சிந்தித்து திட்டம் போடுவதுதான் சாதாரண பொதுமக்களுக்கு சிரமமாக அமைகிறது.

அனைவரும் வங்கியில் கனக்குத் தொடங்கவேண்டும் என்று மக்களுக்கு அறிவிப்பதற்கு முன்பு வங்கிகளுக்கும் சில நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் விதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஏன் தெரிவதில்லை? சாதாரண மக்களின் சிறு சிறு சேமிப்புகள் வங்கிகளின் மூலம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை மக்களோடு மக்களாக வாழ்ந்து பார்த்தால்தான் தெரியுமே தவிர, உலக நாடுகளை சுற்றிப் பார்ப்பதால் தெரியாது.

மேலும், சேமிப்புக் கணக்கு என்றால் என்ன? என்பது வங்கி ஊழியர்களுக்குத் தெரியுமா? இல்லையா? என்பது கேள்விக்கு குறியாகவே இருக்கிறது. காரணம் வங்கியில் ஒருவர் சாதாரண சேமிப்புக் கணக்கைத் தொடங்கி குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு அதன்பிறகு மூன்று மாதங்கள் பணம் போடவும் இல்லை, எடுக்கவும் இல்லையென்றால் அந்தக் கணக்கு செயலற்றதாகி முடக்கப்படுகிறது. சும்மா சும்மா போட்டு எடுத்துக் கொண்டிருப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? இந்த விவரம் தெரியாத பல வயதான முதியோர், மற்றும் சேமிப்புக்கு கனக்குத் தொடங்கியவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு வங்கியில் சென்று பணம் எடுக்க முற்படும்போது அவர்களுக்கு பணம் கிடைப்பதில்லை. அதன் பிறகு, நான்தான் இன்னார், இந்த காரணத்திற்காக என்னால் வங்கியில் பணபறிமாற்றம் செய்ய முடியவில்லை. எனவே எனது கணக்கை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதி கொடுத்த பிறகுதான் அவரால் பணம் எடுக்க முடிகிறது. சில வங்கிகளில் இதற்கு சேவைக் கட்டணமாக குறைந்தபட்சம் 200 ரூபாய் வரையில் வசூலிக்கிறார்கள். இந்த இழப்பை எப்படி சரி செய்யவது? இது அப்பாவி மக்களுக்குத் தேவையா? பல முறை பல வங்கிகளில் நான் இதை கண்டிருக்கிறேன். பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்த பிறகு. என் அக்கவுண்டே இல்லேன்னு சொல்லுறாங்கப்பா என்னன்னு கேளுங்க என்று என்னிடம் பலர் முறையிட்டிருக்கிறார்கள். நான் நிலைமையை எடுத்துச் சொல்லியும் அந்த நேரத்தில் அவர்களுடைய தவிப்பைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. கடிதம் எழுதிக் கொடுத்தால் சரியாகி விடும் என்று நான் சொன்னவுடன் என் கையை பிடித்து, கொஞ்சம் வாப்பா, வந்து பணத்தை எடுத்துக்கொடு. என்று என்னை இழுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

மேலும் பலருக்கு ATM ரகசியக் குறியீட்டை பாத்துகாக்கவும் தெரியவில்லை. தங்களுடைய வங்கிக் கணக்குப் புத்தகத்திலேயே எழுதி வைத்திருக்கிறார்கள். தொலைபேசி எங்கள் எழுதும் சிரிய டைரியிலும் எழுதி அதனுடனேயே ATM கார்டையும் வைத்திருக்கிறார்கள். ஒரு சிலர் கணக்குத் தொடங்கும்போது கவரில் வைத்து கொடுத்த ATM ரகசிய குறியீடு உள்ள கடிதத்தையும் அப்படியே வைத்திருக்கிறார்கள். அதை காட்டித்தான் நம்மை பணம் எடுத்துத் தர சொல்லுகிறார்கள். ஒருவேளை அந்த வயதானவர்கள் ரோட்டில் மயங்கி விழுந்தாலோ, அல்லது ஏதேனும் விபத்தில் சிக்கினாலோ? தவறான நபர்களிடம் இந்த விவரங்கள் சிக்கினால் என்னாகும்?

எனவே ரகசியக்குறியீடு என்பது 4 எண்களாக இருப்பதில் மாற்றம் வேண்டும். ஒரு மனிதனுடைய கை ரேகையை விட சிறந்த குறியீடு, பாதுகாப்பு எதுவும் இல்லை. எனவே ATM மூலம் பணம் எடுக்கும்போது எண்களும், கை ரேகையும் சேர்ந்த ரகசியக்குறியீடு அமைக்க வேண்டும். அதே நேரத்தில் கை ரேகை என்பதில் இன்னும் அதிக அறிவியல் டெச்னாலஜி கலந்த பயன்பாடும் இருக்க வேண்டும்.

மேலும் மினிமம் பேலன்ஸ் என்று 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரையில் ஒவ்வொருவர் கணக்கிலும் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் என்று சில வங்கிகளும் அடம் பிடிக்கின்றன. அப்படி இல்லாத பட்சத்தில் ஒவ்வொரு மாதமும், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் குறைந்தபட்சம் 35 ரூபாய் எடுத்துக் கொள்ளுகிறார்கள். சில வங்கிகள் 0 பேலன்ஸ் இருக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. ஆனாலும் வங்கி ஊழியர்கள் இதை அனுமதிக்காமல் ஒவ்வொரு மாதமும் அபராதம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த விவரம் வங்கி அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கிறது? இதுவும் அப்பாவி மக்களுக்குத் தேவையா?

புதிதாக வங்கி கனக்குத் தொடங்கும்போதே ATM, இன்டர்நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங், செக் புக் என்று அவர்களாகவே ரெடிமேடாக வைத்திருந்து கொடுக்கிறார்கள். அதன் பிறகு ஒவ்வொன்றிற்கும் சேவைக் கட்டணம் என்றும் வசூலிக்கிறார்கள். இதையெல்லாம் யார் கேட்டது? இப்படியெல்லாம் அப்பாவி மக்கள் சுரண்டப்படுகிறார்களே இதற்கு என்ன வழி?

ஒருவர் புதிதாக ஒரு தனியார் வங்கி தொடங்க வேண்டுமானால் அதற்கு வைப்புத்தொகையாக பல கோடிகளை முன்பணமாக செலுத்துகிறார்கள். இதை அவர்கள் மக்களிடமிருந்து இப்படியெல்லாம் வசூலிப்பது சரியாகுமா?

எனவே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும். அதை பின்பற்றவும் செய்யவேண்டும். பணம் கிடைத்தால்தான் வங்கியில் போட முடியும். பணம் கிடைக்காத போது என்ன செய்வது? எனவே 6 மாதங்களுக்கு ஒருவருடைய கணக்கு செயல்படாமல் இருந்தால் அவருடைய வாரிசாக(நாமினி) சேர்க்கப்பட்டுள்ள நபருக்கும், அவருடைய வீட்டு முகவரிக்கு அறிவிப்பு செல்ல வேண்டுமே தவிர வங்கிகள் அந்தக் கணக்கை முடக்கி வைப்பது தவறான நடவடிக்கையாகும்.

சிலர் தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாக வங்கியில் சேமிப்பு வைத்திருப்பார்கள். ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் அவர் இறந்தே போய்விட்டால்.? அவர்களுடைய சேமிப்பு என்னாகும்? எனவே கனக்குத் தொடங்கும்போது சமர்ப்பிக்கப்பட்ட அடையாளாச் சான்றுகளின் முகவரிக்கு தகவல் அனுப்ப வேண்டும். மேலும் அந்த சேமிப்புத் தொகை வாரிசாக சேர்க்கப்பட்டுள்ள நபருடைய வங்கிக்கணக்கிற்கு தானாக மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் வாரிசுதாரர் என்பது கணக்கு தொடங்கியவர்தானே முடிவு செய்கிறார். எனவே அவருடைய வங்கி கணக்கிற்கு மாற்றுவதில் எந்தப் பிரச்சினையும் வராது. ஒருவேளை ஏதாவது காரணங்களால் கணக்கு தொடங்கியவர் 7 வது மாதத்திலோ அல்லது சில வருடங்களுக்குப் பிறகோ வங்கியை அணுகினால் வாரிசுதாரருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை சொல்லலாம். ஆனால் இதற்கு அவசியம் இருக்காது. ஏனென்றால் 6 வது மாதத்தில் வாரிசுதாரருக்கு பணம் மாறும்போதே கணக்கு தொடங்கியவருக்கும் தகவல் சென்றுவிடும். அதுமட்டுமல்லாமல் கனக்குத் தொடங்கும் போதே இது அவருக்கு தெரிந்திருக்கும்போது பிரச்சினை வராது.

ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை கட்டாவிட்டால் எப்படி பலருக்கும் தகவல் அனுப்புகிறார்கள். யார் யாரையெல்லாம் விசாரிக்கிறார்கள் அதே போலவே ஒரு வங்கி கணக்கு செயல்படாமல் இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், எந்தக் காரணத்திற்காகவும் இருப்புத்தொகையுள்ள ஒருவருடைய கணக்கை வங்கியே முடக்குவது சரியாகாது!!

மிகவும் முக்கியமாக, வங்கி கணக்கு மூலம்தான் மக்கள் பணத்தை சேமிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்படும் நிலை வந்தால் தனியார் வங்கிகளிலோ, அல்லது அதிக வட்டியில் கடன் கொடுப்பவர்களோ நாட்டில் எங்குமே இருக்கக் கூடாது! இதில் அரசு கவனமாகவும், கடுமையாகவும் நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் மக்களின் பணத்தை வைத்து அதிக வட்டியில் சிலர் சம்பாதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அல்லது எந்த நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தையும் முற்றிலுமாக ஒழிப்பதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. இதன் மூலம் கருப்புப்பணத்தை ஒழிப்பது மட்டுமல்லாமல் அளவுக்கு மீறிய சொத்துக்களை யாரும் சேமிக்காமலும் தடுத்து சமத்துவமான வாழ்க்கை முறையை அனைவருக்கும் அமைத்துக் கொடுக்க முடியும். இந்த உலகம் மேடு பள்ளங்களாக இருக்கிறது என்பதையும், வானத்தில் இருந்து பொழியும் மழை நீரானது எல்லோருக்கும் பொதுவாக பெய்கிறது என்பதையும் நாம் அறிவோம். ஆனால், மேடான பகுதியில் பெய்யக் கூடிய மழையானது பள்ளத்தை நோக்கி ஓடி அங்கேயே தேங்கி விடுகிறது என்பது இயற்கையானது. இதை தடுப்பதற்கு மேடுபள்ளங்களை அடித்து நொறுக்கி சமப்படுத்துவது என்பதைத்தவிர வேறு வழியே இல்லை. அதே போலவே அரசுக்குத் தெரியாமல், அல்லது அரசின் அனுமதியில்லாமல் அண்டர்கிரவுண்ட் பிசினஸ் செய்யும் சில கறுப்புப்பண முதலைகளிடம் ஒரு நாட்டின் பொருளாதாரமும் தேங்கி விடுகிறது என்பதும் உண்மை.

இதை தடுப்பதற்கு நாட்டில் "மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது" என்பது மிகவும் நுட்பமான ஒரு செயல்திறன் மிக்க முயற்சியாகும். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் மத்திய அரசு மிகவும் திறமையாக செயல்பட்டிருக்கிறது என்பது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கான முதல் படியாகும். இந்த ரூபாய் நோட்டின் வடிவத்தை மாற்றுவது என்ற பிரதமர் மோடியின் முதல் சிந்தனைக்கு முகப்புத்தகம் போன்ற சமூக இணையதளங்கள் உதவி செய்திருக்கிறது என்பது மோடி அவர்களால் மறுக்கமுடியாத உண்மை!!!!!

ஆனால், இந்த ரூபாய் நோட்டு மாற்றம் என்பது ஒரு முறை மட்டும் மாற்றினால் போதாது. ஒவ்வொரு முறை நாட்டின் ஆட்சி அதிகாரம் மாறும்போதும் ரூபாய் நோட்டுக்களின் வடிவத்தையும் மாற்றம் செய்தாகவேண்டும். இப்படி செய்யும்போதுதான் பதுக்கி வைக்கப்படும் ரூபாய் நோட்டுக்கள் தானாக வெளியில் வரவும், சில காலங்களில் இது அடியோடு குறைந்துவிடவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனால், இப்படி செய்வதில் பல சிக்கல்களும், பண விரயமும் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு. ஏனென்றால் ரூபாய் நோட்டுக்களை வடிவமைத்து அச்சடிப்பதற்கு நம் அரசு செலவு செய்தாகவேண்டும். அதுமட்டுமல்லாமல் எல்லா காலங்களிலும் வரக்கூடிய ஆட்சியாளர்கள் பிரதமர் மோடியாகவே இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கவும் முடியாது அல்லவா?

சரி, இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை அடிக்கடி மாற்றும் முதல் முயற்சியில் சிக்கல்கள் இருக்கிறது என்றால், அடுத்த கட்ட இரண்டாவது முயற்சி என்ன? அது மிரட்டலான முயற்சி!. ஆனால், அதைத்தவிர வேறு வழியே இல்லை. அறுவைச் சிகிச்சை செய்யும் ஒருவருக்கு வேதனைகள் இருக்கும். ஆனால், அதை பொறுத்துக் கொண்டால் எழுந்து நடமாடலாம்? வேதனைகளைத் தாங்கி நாம் எழுந்து நடமாடப் போகிறோமா? அல்லது காலம் முழுதும் படுத்திருந்தே சாகப்போகிறோமா? மோடியின் மத்திய அரசு முதல் முயற்சியில் வேதனை தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யத் தவறிவிட்டது. இனிமேலாவது அதைச் செய்யுமா? காத்திருந்து பார்ப்போம்!.

தொடரும்!

Message reputation : 100% (9 votes)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு...

From எழுத்ததிகாரன்

Topic ID: 808

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...