முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வழக்கை சந்திப்பது குறித்து, கட்சியின் வழக்கறிஞர்களுடன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
அரசு பணிகளை கவனிக்காமல், முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஒய்வு எடுப்பதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். தன் மீது விஜயகாந்த் அவதூறான கருத்தை தெரிவித்ததாக கூறி, முதல்வர் ஜெயலலிதா, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன் பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 லட்ச ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கி வருகிறார்; இதற்காக மாநிலம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஜெ., வழக்கு தொடர்ந்தது குறித்த தகவல் நேற்று முன்தினம் விஜயகாந்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்சியின் வழக்கறிஞர்களை, அவசரமாக ராமநாதபுரம் புறப்பட்டு வருமாறு, விஜயகாந்த் தகவல் அனுப்பினார்; அதன்படி, விஜயகாந்தை நேற்று சந்தித்தனர். ஜெ., தொடர்ந்துள்ள வழக்கின் அனைத்து சாராம்சத்தையும், வழக்கறிஞர்களிடம் விஜயகாந்த் கேட்டு தெரிந்துக் கொண்டார். வழக்கை சந்திப்பது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் அவர் வழக்கறிஞர்களிடம் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, விஜயகாந்த் மீது ஜெ., தொடர்ந்துள்ள வழக்கு, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நில அபகரிப்பு தொடர்பாக, தே.மு.தி.க., திருத்தணி எம்.எல்.ஏ., அருண்சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, விஜயகாந்த் மீது, ஜெ., அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தி.மு.க.,வினர் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் தங்கள் பக்கமும் திரும்பியுள்ளதா என்ற சந்தேகம் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.
இதுகுறித்து தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தே.மு.தி.க.,வில் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரனை தவிர மீதமுள்ள, 27 எம்.எல்.ஏ.,க்களும் அரசியலுக்கு புதியவர்கள். மற்ற கட்சியினரை போல, வழக்கு, கைது உள்ளிட்ட பிரச்னைகளில் அவர்கள் இதுவரை சிக்கியதில்லை. இதுபோன்ற நெருக்கடிகள் ஆளும்கட்சியில் இருந்து வரும் என்ற தகவலை அவர்களிடத்தில் யாரோ பரப்பியுள்ளனர். இதனால் பீதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.